Saturday, 15 August 2009

ரத்த தானம் – சில நினைவுகள், சில குறிப்புகள்

த்தம் சிந்துதல் என்பது எனக்கு சிறுவயதில் அவ்வபோது நடக்கும் நிகழ்ச்சிதான். அதற்காகநானும் ரவுடிதான் என்று கூறிக்கொண்டு அலைந்ததாக நினைக்க வேண்டாம். எண்ணங்கள் எங்கெங்கோ மிதக்க, கால் தடுக்கி விழுவதும், உயரம் காரணமாக ஆங்காங்கே இடித்துக்கொள்வதுமே ரத்தம் சிந்துதலுக்கு காரணமாயின. ஆனால் அதற்கு செவ்வாய் ஆதிக்கம், பிறந்த தேதி 9 என்பது உள்ளிட்ட பல காரணங்களை பெரியவர்கள் சொல்ல ஆரம்பித்த நேரத்தில்தேவையின்றி ரத்தம் சிந்துதல் குறைந்து விட்டது.

முதல் தடவையாக பயனுள்ள முறையில் ரத்ததானம் செய்தபோது எனக்கு 18 அல்லது 19 வயதிருக்கலாம். எனது நண்பனின் தந்தையார் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது நண்பன் வேலை தேடியோ, வேறு காரணங்களுக்காகவோ வெளியூர் சென்றிருந்தான். நண்பனின் தாயாருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் மருத்துவமனை சென்ற நான் ரத்தம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானேன்.

ரத்தம் எடுக்கும் பணியாளரிடம் நான் கேட்ட கேள்விகளால் நொந்துபோன அவர், உண்மையிலேயே ரத்தம் கொடுப்பதற்கு உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டார். இருக்கிறது! ஆனால் நான் ரத்தம் கொடுப்பதால் நானும் பாதிக்கப்படக்கூடாது ரத்தம் பெற்றுக்கொள்ளும் என் நண்பனின் தந்தையாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற உண்மையான ஆர்வம் காரணமாகவே கேள்விகளை சற்று அதிகமாக கேட்டுவிட்டதாகக் கூறி படுக்கையில் படுத்து கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

ரத்தம் எடுத்தபின் எனக்கு சற்று அதிசயமாக இருந்தது. முன்பைவிட சுறுசுறுப்பாக இருப்பதாக தோன்றியது. எதையாவது உடனடியாக செய்யவேண்டும் என்றுகூட தோன்றியது. ரத்தம் எடுத்த மருத்துவமனை நண்பர், ரத்த தானம் செய்வதின் அவசியம் குறித்து ஒரு சிறு வகுப்பே எடுத்தார். மேலும் என் முகவரியையும் குறித்து வைத்துக்கொண்டார்.

அடுத்த ஒரு சில மாதங்களிலேயே என் சகோதரிக்கு ரத்தம் கொடுக்கவேண்டிய நிலை வந்தபோது நான் எந்த தயக்கமும் இல்லாமல், ஒருவிதமான மகிழ்ச்சியான மனநிலையில் ரத்தம் கொடுத்தேன். அதன் பிறகு அந்த மருத்துவமனையின் வாடிக்கையான ரத்தக்கொடையாளி ஆனேன். பல நாட்களில் நள்ளிரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் என்வீடு தேடிவந்து ரத்தம் கேட்டதும் உண்டு. நானும் சளைக்காமல் ஆனால் உரிய கால இடைவெளியுடன் ரத்தம் கொடுத்து வந்தேன். ஏழை நோயாளிகளுக்கு ரத்தம் கொடுத்ததுடன், அவர்களுக்கு பழம் உள்ளிட்ட அன்பளிப்புகள் அளித்ததும் உண்டு.

இதற்குள் என் நட்பு வட்டம் பெரிதாகி, ரத்தவங்கி நடத்துபவர்களும் எனக்கு நண்பர்கள் ஆனார்கள். ஆனாலும் ரத்தம் தேவைப்படும் ஒரு நோயாளிக்காக மட்டுமே ரத்தம் கொடுப்பது என்பதை கொள்கையாக வைத்திருந்தேன். ரத்த வங்கியின் கையிருப்புக்காக ரத்தம் கொடுப்பதில்லை. ஆனால் தேவைப்படும் ரத்தவகைக்கு ஈடுசெய்வதற்காக ரத்தம் கொடுக்க தயங்கியதும் இல்லை. இவ்வாறு சுமார் சுமார் 50 முறை ரத்தம் கொடுத்திருப்பேன்.

இப்போது சென்னை வந்து சுமார் 8 வருடங்கள் ஆனாலும், 5 அல்லது 6 முறை மட்டுமே ரத்தம் கொடுத்திருக்கிறேன். எனது ரத்த வகை: A1+. தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.

-oOo-

அண்மையில் சேலத்திற்கு ஒரு விழாவிற்காக சென்றேன். அந்த விழாவை நடத்திய மருத்துவ நண்பர், ஒரு ரத்த வங்கியையும் நடத்தி வருகிறார். ரத்த வங்கி நடத்துவதில் உள்ள தொழில்நுட்ப சிரமங்களையும், மக்களின் மனநிலை கோளாறுகளையும் விளக்கினார். தொழில்நுட்ப சிரமங்களுக்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் மக்கள் மனநிலையை மாற்ற முயற்சிக்கலாம்.

ரத்தம் கேட்டு வருபவர்கள் யாரும் ரத்தம் கொடுக்கத் தயாராக இருப்பதில்லை. பணம் கொடுத்தால் ரத்தம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ரத்தத்தை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய முடியாது என்பதை யாரும் உணர்வதில்லை. இதில் படித்தவர்களும், பணம் படைத்தவர்களும் அதிகம் இடம் பெறுகின்றனர்.

இதனால் தொழிற்முறை ரத்தக்கொடையாளிகளை வேறுவழியின்றி ஆதரிக்க வேண்டியுள்ளது. உரிய வேலைவாய்ப்பற்றும், தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாகியும் உள்ள இவர்கள் பணத்திற்காக ரத்ததானம் செய்பவர்கள். இவர்களுடைய ரத்தம் போதுமான தரத்தில் இருப்பதாக கூற முடியாது.

எனவே ரத்தம் தேவைப்படுபவர்கள், இதுபோன்ற தொழிற்முறை கொடையாளிகளை தவிர்த்துவிட்டு மற்ற கொடையாளிகளை நாடுவதே நல்லது. அதற்கு அவ்வாறு ரத்தத்திற்காக நாடுபவர்களும் ரத்தக்கொடையாளிகளாக இருக்க வேண்டும். தனது ரத்தவகை என்ன என்பதே தெரியாமல், சொந்த தேவைக்காக மட்டும் ரத்தம் தேடுவது நேர்மையற்ற செயல் என்பதை உணர வேண்டும்.

-oOo-

தற்போது சில சமூக அமைப்புகள் (உ-ம்: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்) ரத்தக்கொடையை ஒரு முக்கியமாக சமூகசேவையாக செய்ய ஆரம்பித்துள்ளன. வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. ஆனால் விளம்பரத்திற்காகவும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இந்த நல்லகாரியத்தை கொச்சைப்படுத்தி விடுகின்றனர்.

நமது சேலம் ரத்தவங்கி நண்பரின் அண்மைய அனுபவம் ஒன்று:

அரசியல் தலைவர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்த அந்த கட்சி முடிவு செய்தது. உள்ளூர் அமைச்சரின் வாரிசு தலைமையில் அந்த முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. நமது நண்பரும் ரத்ததான முகாம் நடத்த ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட சில நாட்களுக்கு இரு தினங்கள் முன்பாகவே கட்சியின் குட்டித்தலைவர்கள் அந்த ரத்தவங்கியை முற்றுகையிட்டு விழா திட்டமிடலில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அந்த நாளும் வந்தது. கரைவேட்டிகள் அந்த பகுதியில் அலைகடலென குவிந்தனர். அமைச்சரின் வாரிசும் வந்தார். ரத்ததானம் செய்யவிருக்கும் தொண்டர்களை பாராட்டி பேசினார். பேசிய உடனே முக்கிய வேலை காரணமாக விரைந்து சென்றுவிட்டார். உடனே குட்டித்தலைவர்களும் கிளம்பினர். மெல்ல, மெல்ல மற்றவர்களும் புறப்பட்டனர். சற்று நேரத்தில் அந்த இடம் வெறிச்சோடியது. ஒருவர்கூட ரத்தம் தானம் செய்யவில்லை.

அடுத்தநாள் செய்தித்தாளில் கொட்டை எழுத்துகளில் செய்தி வந்திருந்தது: கட்சித் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 300 தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.

-oOo-

இருக்கும்வரை தேவைப்படுவோருக்கு ரத்தம் கொடுப்போம். இறக்கும்போது அனைத்தையும் கொடுப்போம்!

7 comments:

  1. இரத்த தானம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

    30 முறைகளுக்கு மேல் இதுவரை கொடுத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. இரத்த தானம் மிகவும் உபயோகமானது!!!

    ReplyDelete
  3. + வோட்டு குத்தியாச்சு :)

    ReplyDelete
  4. நன்றி கதிர்-ஈரோடு, தேவன் மாயம், சென்ஷி.

    ReplyDelete
  5. ஏமாளித்தமிழன்18 August 2009 at 11:01

    ரத்த தானம் செய்வதாக டபாய்த்தவர்கள் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளா?

    ReplyDelete
  6. Muthumoorthy-Nature lover24 September 2009 at 12:31

    As u told some ppl really dont kno their own blood group. B4 creating awareness abt blood donation, blood screening shud done everywhere... V can create awareness in tat camp nd can collect details of all blood groups...

    ReplyDelete

கொரோனா தடுப்பு மருந்து – காப்புரிமை என்ற மரண வணிகம்

  உலகத்தின் வல்லரசு நாடுகளையே மிரட்டிவரும் கொரோனா வைரஸுக்கு எதிராக சுமார் 10 தடுப்பு மருந்துகள் புழக்கத்தில் உள்ளன. மேலும் பல தடுப்பு மருந்த...