மக்களுடைய சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக உயிரையும் பணயம் வைத்து உலகம் முழுவதும் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் துணிவிற்கான சாட்சியமாக இந்த விருது திகழ்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் உயிர்துறந்த பின் இந்த விருதைப் பெறும் இரண்டாவது பத்திரிகையாளராக 'லசந்த' இருக்கிறார்.
அன்னாவிற்கும், லசந்தவிற்கும் இடையே வினோதமான ஒற்றுமைகள் உள்ளன. இருவருமே 1958ம் வருடம் பிறந்தவர்கள்; அரச பயங்கரவாதத்தை துணிவுடன் விமர்சனம் செய்தவர்கள்; மனித உரிமைகளுக்காக அயராது குரல் கொடுத்தவர்கள்; கூடுதலாக கொலை மிரட்டலுக்கும் ஆளானவர்கள்; இவர்கள் இருவருமே தப்பியோட முயற்சித்ததில்லை; இருவருக்குமே, தங்கள் உயிரை விலையாக தரவேண்டிய நிலை வரும் என்பது தெரிந்திருந்தது; இருவருக்குமே, தங்களை யார் கொலை செய்வார்கள்? என்பதும் தெரிந்திருந்தது; ஆனால் இந்தக் கதை, அன்னா மற்றும் லசந்த-வுடன் முடியவில்லை.
இலங்கையில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது எழுதப்படாத விதிமுறை போன்று ஆக்கப்படுகிறது. அதிபராக மஹிந்த ராஜபக்சே பதவி ஏற்றதிலிருந்து இதுவரை 16 பத்திரிகையாளர்கள் ராணுவ பாணி தாக்குதலில் கொல்லப் பட்டுள்ளனர். நானும், லசந்தவும் ஆசிரியராக இருந்த பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதுபோல பல பத்திரிகை அலுவலகங்கள் தாக்கி அழிக்கப்படுகின்றன. பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வாடிக்கொண்டிருக்கின்றனர். லசந்தவைப் போல பல பத்திரிகையாளர்கள், அதிபர் ராஜபக்சேவினால் நேரடியாக மிரட்டப்படுகின்றனர். என்னைப் போன்ற பல பத்திரிகையாளர்கள் தப்பியோடுமாறு நிர்பந்திக்கப் பட்டிருக்கிறோம். நான் நாடு திரும்பினால் எனது நாட்கள் எண்ணப்படும் என்பது எனக்கு தெரியும்.

ஆனால் இந்த மக்கள் செய்த தவறுதான் என்ன? உலகின் மிகக்கொடுமையான பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் பரவியுள்ள இடங்களில் வசிக்கும் சிறுபான்மை தேசிய இனத்தில் பிறந்ததுதான இவர்கள் செய்த தவறு! இந்த தமிழ் மக்கள் ஒரு புறம் விடுதலைப்புலிகளிடமும், மறுபுறம் இலங்கை அரசின் பயங்கரவாதிகளிடமும் சிக்கிக் கொண்டுள்ளனர். (இந்த அரச பயங்கரவாதி என்ற வார்த்தையை நான் தெரிந்தே பயன்படுத்துகிறேன். எனென்றால் இந்த உலகிலேயே தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக வெடிகுண்டுகளை வீசி படுகொலை செய்யும் ஒரே நாடாக இலங்கை மட்டுமே இருக்கிறது)
இந்த இனரீதியான போர் ரகசியமான ஒன்றல்ல. அரசுத்தரப்பில் வைக்கப்படும் பதாகைகளில் ராணுவத்தை பாராட்டும் வார்த்தைகள் – நான் உட்பட மிகப்பெரும்பான்மை மக்கள் சார்ந்துள்ள – சிங்கள மொழியில், “ராணுவ வீரர்களே, நம் இனம் உங்களுக்கு மரியாதை செலுத்துகிறது” என்று எழுதப் பட்டுள்ளது. நாடோ, மக்களோ இல்லை. சிங்கள இனம் மரியாதை செலுத்துகிறது! இவை எதுவும் தமிழில் இல்லை. எந்த தமிழ் மக்களை விடுவிப்பதாக இலங்கை அரசு சொல்கிறதோ அந்த மக்களின் மொழியில் இல்லை.
இலங்கையில் என்ன நடக்கிறது? என்பதை உலகம் உடனடியாக உணர்ந்து கொள்ள வேண்டும். இது குறித்து நன்கு தெரிந்தவர்கள் அதை வெளியுலகுக்கு தெரிவிக்கவில்லை என்பது என்னை மிகவும் சலிப்புறச் செய்கிறது.
லசந்தவிற்கு வழங்கப்பட்ட இந்த விருது உலகம் முழுக்க உள்ள அதிகார வெறிகொண்ட ஆட்சியாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறது – செய்தியாளனை கொலை செய்வது தீர்வு அல்ல. மேலும் வன்முறை மூலம் மனித உணர்வுகளை நசுக்கிவிட முடியாது. லசந்தவின் மரணத்தின்போதுகூட அவரது பெயர்தான் கூகுளில் அதிகம் தேடப்படும் பெயரானது, இலங்கை அதிபரின் பெயரைவிட.